நகரம் விட்டு நகர்வோம்

அழகான சோலை அதிலே
               அமைதியாய் பறவைப்பாட்டு
இளங்காறு மெதுவாய் வந்து 
              விளையாட மலரின் கூத்து
மழலைபோல் நானுமெந்தன்
              மனதுக்குள் மாறிவிட்டேன்.
களவாடிப்போக இனிமேல் 
              கவிஞனுக் கிதயமில்லை.

மலர்களின் காதில் வந்து
              ரகசியம் பேசும் வண்டு
இலைகளில் அமர்ந்துகொண்டு 
              இளைப்பறும் பட்டாம் பூச்சி.
மலைமுகட்(டு) அருவி ஆங்கே
              மந்தைபோல் மேகக் கூட்டம்.
விளையாடித் திரிவேன் இதனை
              விடுபட்டு வரவே மாட்டேன்.

இத்தனை அழகை இங்கே
              இயற்கையில் கண்ட பின்னர்
தத்தையைப் புகழ்ந்து பாடும்
              தப்பை நான் செய்யமாட்டேன்
கத்துவேன் குதிப்பேன்; அந்த
              காட்டாற்றில் குளிப்பேன்; பட்டு
மெத்தைபோல் விரிந்திருக்கும்
              புற்க்களில் படுத்துக்கொள்வேன்.

காற்றிலே சுத்த முண்டு
              கருங்குயில் சத்தமுண்டு
நாற்றங்கள் வீசுமிந்த
              நகரத்து வாழ்வைவிட்டு
மாற்றங்கள் தேடுகின்ற
              மனிதரே இங்கு வந்து
தேற்றுங்கள் மனதை; இல்லை
              தேம்பியே செத்துப் போங்கள்.

கவலைகள் மறப்போம்; கொஞ்சம்
              கனவிலே மிதப்போம்; குட்டித்
தவளைபோல் துள்ளித் துள்ளி
              தண்ணீரில் குதிப்போம்; வாழ்வின்
அவலங்கள் தொலைந்ததென்று
              அமைதியே நிலைக்கு மென்று
கவிதைகள் பாடிப் பாடி
              காலங்கள் கடந்திருப்போம்.

To View The Vedio Of This Poem Click Hear

Previous Post Next Post